இரட்டைக் காப்பியங்கள்

 

இரட்டைக் காப்பியங்கள்

                                                 முனைவர்.கி.கோவிந்தன்

 

முன்னுரை

ஏதேனும் ஒரு வகையில் ஒற்றுமை உடைய அல்லது தொடர்புடைய இரண்டை இரட்டை என்பது மரபு. சான்றாக இரட்டைப் பிள்ளைகள், இரட்டைப் புலவர்கள் (இளஞ்சூரியர் முதுசூரியர்), இரட்டை நகரங்கள் (ஹைதராபாத் & செகந்திராபாத்) ஆகியவற்றைக் கூறலாம். இவ்வாறு தமிழ் இலக்கியங்களுள் இரட்டைக் காப்பியங்கள் 

சிலப்பதிகாரம் & மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களைக் கூறலாம். கோவலன், கண்ணகி இருவரின் வாழ்வைப் பற்றியது சிலப்பதிகாரம் ஆகும். கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலைப் பற்றியது மணிமேகலைக் காப்பியம் ஆகும். முன்னதை இயற்றியவர் இளங்கோவடிகள்; பின்னதை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இவ்விரண்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளை பின்வருமாறுக் காணலாம். 

இரட்டைக் காப்பியங்கள் - ஒற்றுமை

·                     இரு காப்பியங்களும் அணிகலன்களின் பெயர் கொண்டவை.

·                     கரு ஒன்றுஉரு இரண்டு போலக்; கதை ஒன்று; காப்பியம் இரண்டு.

·                     சிலம்பு பெற்றோர் பற்றியது. மேகலைப் பிள்ளையைப் பற்றியது. ஒரு குடும்பக் கதை இரண்டு காப்பியங்களாகப் படைக்கப்பட்டுள்ளது.

·                     சிலம்பு எங்கு முடிகிறதோ, அங்கு மேகலை தொடங்குகிறது. அதாவது சிலம்பின் தொடர்ச்சியே மணிமேகலை.

·                     அமைப்பிலும் ஒப்புமை உண்டு. இரண்டும் 30 காதைகளைக் கொண்டவை. இரண்டும் ஆசிரியப்பாவால் ஆனவை. இரண்டும் முதல் நூல்கள் ஆகும்.

·                     இல்லற வாழ்வின் சிறப்பை சிலம்பும், துறவறத்தின் மாண்பினை மணிமேகலையும் உரைக்கின்றன.

·                     இரு காப்பியங்களும் பெண்களை மையமாகக் கொண்டவை.

·                     இரண்டிலும் கடவுள் வாழ்த்து இல்லை. இரண்டும் விழாவில் அதாவது சிலம்பு திருமண விழாவிலும் மேகலை இந்திர விழாவிலும் தொடங்குகின்றன. 

·                     இளங்கோவும், சாத்தனாரும் சமகாலப் புலவர்கள். முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுகஎன்று சாத்தனார் உரைக்க, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். ஒருவர் கேட்க இன்னொருவர் பாடியது.

·                     அறம், பொருள், இன்பம் மூன்றையும் பாடுவது சிலம்பு. வீடுபேற்றினை மேகலைப் பாடுகின்றது.

·                     இரு காப்பியங்களும் நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டோம்என்னும் பண்பின் அடிப்படையாகப் பிறந்தவை.

·                     தன்னை மறந்தக் கோவலனைக் கண்ணகி மறவாமல், சிலம்பு தந்து மதுரைக்குப் போக செயல்பட்டவள் அங்ஙனம் செய்யாது இருப்பின் கண்ணகியின் கதை இல்லை.

·                     அதேபோன்று மாதவி, தன்னை மறந்த கோவலனை, தானும் மறந்து போகாமல் துறவறம் பூண்டுமகளையும் துறக்க செய்யாது இருப்பின் மணிமேகலைக் கதை இல்லை.

·                     எனவே கண்ணகி, மாதவி இருவரின் தம்மை மறந்தாரைத் தாம் மறக்கமாட்டாத பண்பேகாப்பியம் இரண்டுக்கும் தோற்றுவாய் ஆகும். 

இரட்டைக் காப்பியங்கள் -  வேற்றுமை

·                     இரட்டைக் குழந்தைகள் இடத்தும் மாறுபாடும், வேறுபாடும் இருப்பதுபோல, இக்காப்பியங்களிலும் பேதங்கள் உள்ளன.

·                     சிலம்பு வரலாற்றுக் காப்பியம்; கற்பனையை நீக்கினாலும் காப்பியத்தின் கட்டுக்கோப்பு குலையாது.

·                     மேகலையோ கற்பனைக் காப்பியம்; மணிமேகலா தெய்வமும் அமுதசுரபியும் அகற்றப்படின் கதையில்லை.

·                     சிலம்பு சமணக் காப்பியம். மணிமேகலை பௌத்தக் காப்பியம்.

·                     சிலம்பு பொருட்தன்மையால் பெயர் பெறுகிறது. மேகலைப் பாத்திரத்தால் பெயர் பெறுவது.

முடிவுரை

இரண்டு காப்பியங்களுக்கு இடையில் சில வேறுபாடுகள் இருப்பினும்காலத்தால் மாறுபட்டிருப்பினும், கதையால், கருத்தால் ஒன்றி நிற்கும் ஒற்றுமையால் இரட்டைக் காப்பியங்கள் எனப் போற்றப்படுகின்றன

,,

Comments

Popular posts from this blog

Operating System Structure

Asymptotic Notations

ASP.NET Events Handling